பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் உள்ள அபிஜான் என்ற நகரில், டிராஃபிகுரா என்ற உலகின் 3-வது மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனம், மக்கள் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் தீங்கு விளைவுக்கும் நச்சுக் கழிவுகளை கொண்டு போய் கொட்டியுள்ளது.
இந்த நச்சுக் கழிவினால் ஏற்பட்ட நாற்றத்தினால் பலருக்கு மூச்சுத் திணறலும் அதில் உள்ள உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அமிலங்களால் இது வரை 15 பேர் மரணமடைந்துள்ளதாகவும் நிரூபிக்கப்பட்ட நிலையில் பசுமை இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின் மீது நெதர்லாந்தில் கொலைக்குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாற்றி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி, டிராஃபிகுரா நிறுவனம் குத்தகைக்கு விட்டுள்ள புரோபோ குவாலா என்ற கப்பல் சுமார் 100 டன்கள் அளவுள்ள நச்சுக் கழிவுடன் ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்திற்குள் நுழைந்தது. அதாவது ஆம்ஸ்டர்டாம் போர்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம் இந்த நச்சுக் கழிவுகளை எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நச்சுக் கழிவு எதிர்பார்த்ததை விட நச்சுத் தன்மை அதிகம் கொண்டிருந்ததால் இந்த நிறுவனம் இதனை எடுத்துக் கொள்ள நிர்ணயித்த விலையில் 20 மடங்கு அதிகரிப்பு செய்தது. இதனால் டிராஃபிகுரா நிறுவனம் கப்பலை வாபஸ் பெற்று மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டின் முன்னாள் தலை நகரமான அபிஜானில் உள்ள ஒரு கழிவு சுழற்சி நிறுவனத்திற்கு அனுப்ப முடிவு செய்தது.

அங்கு இது உள்ளூர் உரிமம் பெற்ற டாம்மி கம்பெனி என்ற நிறுவனத்திடம் மறு சுழற்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் மறு சுழற்சி செய்யாமல் அதனைக் கொண்டு சென்று வெவ்வேறு இடங்களில் கொட்டியுள்ளது. இந்த நிறுவனம் டிராபிகுரா நிறுவனத்தின் முகவாண்மை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டன. 15 பேரின் மரணம் இந்த நச்சுக் கழிவினால் ஏற்பட்ட விளைவுகளே என்று பசுமை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் இயக்கங்கள் இந்த விவகாரத்தை கையிலெடுத்ததோடு டிராஃபிகுராவின் வழிகாட்டுதலின் பேரில்தான் இது வெளியிடத்தில் கொட்டப்பட்டதா என்ற வகையில் விசாரணையிலும் இறங்கியது.
அந்த நச்சுக் கழிவில் மலம், சாக்கடை நீர் உள்ளிட்டவை கலந்திருப்பதால் அதில் சல்ஃபர், ஹைட்ரஜன் சல்ஃபைட் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நச்சு அமிலங்கள் கலந்திருந்ததாக நெதர்லாந்து தேசிய தடயவியல் அமைப்பு கண்டுபிடித்தது.
ஆனால் அந்த நச்சுக் கழிவில் எந்த விதமான அபாய அமிலங்களும் இல்லை, உயிர்க்கொல்லி நச்சுகள் இல்லை என்று வாதாடியது டிராஃபிகுரா நிறுவனம்.
இம்மாதம் 16ஆம் தேதி பி.பி.சி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில், ஐவரி கோஸ்ட் நாட்டின் அபிஜான் நகரில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவு மிகவும் ஆபத்தானது என்று டிராஃபிகுரா நிறுவனத்திற்கு ஏற்கனவே தெரியும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அறிவித்தது.
இந்த வழக்கில் தற்போது டிராஃபிகுரா நிறுவனத்தின் மீது கொலைக்குற்றம், மனித விரோதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கின் ஆதாரமான விஷயம் 15 பேர் உயிரிழந்தது, சுமார் 1 லட்சம் பேருக்கு இனம் புரியாத நோய்கள் ஏற்பட்டது ஆகியவற்றோடு இத்தகைய நச்சுக் கழிவுகளை ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நச்சுக் கழிவுகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று பார்த்தால் அதில் டிராஃபிகுரா நிறுவனத்தின் சில மலிவான லாபம் அடையும் உத்திகள் வெளிப்படும்.
மெக்சிகோவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனத்திலிருந்து 'கோகர் நாஃப்தா' என்ற கழிவு எண்ணெயை பெரிய அளவில் வாங்கி அதில் காஸ்டிக் சோடாவை கலந்து அதன் பிறகு அதிலிருந்து சுத்தமான எண்ணெயை தயாரிப்பதுதான் டிராஃபிகுராவின் செயல்.
'கோகர் நாஃப்தா'-வை விலைக்கு வாங்குவதன் மூலம் டிராஃபிகுரா நிறுவனம் கார்கோ ஒன்றுக்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக மட்டும் பார்க்கும். காஸ்டிக் தொடர்பான பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன என்பது வேறு கதை. இந்த சுலப வழி லாபத்தை உருவாக்கும் டிராஃபிகுரா நிறுவனத்தின் இந்த செயல்பாட்டினால் விளைந்ததுதான் இந்த அபாயகரமான நச்சுக் கழிவுகள்.
அபிஜான் நகரின் 18 முக்கிய இடங்களில் இந்தக் கழிவு கொட்டப்பட்டுள்ளது. இதனால் மரணங்களும், கருச்சிதைவும், பிறவிக் குறைபாடுகளும் நிகழ்ந்திருப்பது பற்றிய நிரூபணங்கள் உள்ளதாக ஐ. நா. இந்த வாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.